Friday 7 July 2017

ஏறுகிற சந்தையில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது எப்படி?

This article of mine got published in Nanayam Vikatan on 6th July.

Market is in its peak period!!
Eager to know how to invest in Equity in Mutual funds and get benefited?
Read further..


பங்குச் சந்தை ஏறிக் கொண்டே இருக்கிறது. தினம், தினம், முந்தைய உச்சியை கடக்கிறது.  கடந்த 6 மாதத்தில் பங்குச் சந்தையின் ஏற்றம் 19.6% சதவிகிதமாக உள்ளது. கடந்த  2013 ம் ஆண்டுவாக்கில், நிறுவனப் பங்குகள் மற்றும் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த  மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்தவர்கள் வாயெல்லாம் சிரிப்பு தான். இதை எப்படி தக்கவைத்து கொள்வது  என்று அறிவது அவசியமே! காரணம் நாம் அறிந்தது தான். பங்குச் சந்தை மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல்ஃபண்ட் முதலீட்டில்  ஏற்றமும் இறக்கமும் சகஜமே. "காகித லாபம் கறிக்கு உதவாது" லாபத்தை தக்க வைக்க என்ன வழி என்று பார்ப்போமே. 
 
பல முதலீட்டாளர்களுக்கு, தற்போது ஒரு பகுதி மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை விற்பதா அல்லது முற்றிலும் விற்பதா என்பதில் குழப்பம்.   பங்குச் சந்தை செயல்பாடு எப்படி உள்ளது, இன்னும் ஏறுமா இறங்குமா என்பதை எப்படி அறியலாம்? ஓர் அணுகுமுறையை உற்று கவனிப்போம்.. 

சமீப காலங்களில் டயனாமிக் அசெட் அலோகேஷன் (Dynamic Asset Allocation ) ஃபண்ட்கள் பிரபலம். இதன் தாத்பரியம், சந்தை நிலைமைக்கேற்றவாறு பங்கு முதலீட்டு விகிதாச்சாரத்தை குறைந்தபட்சம்  30% ஆகவும் அதிகபட்சம் 95% ஆகவும் இதன் ஃபண்ட் மேலாளர்கள் வைத்திருப்பார்கள்.
 
சந்தை குறைந்திருக்கும் போது இந்த ஃபண்ட்களின் போர்ட்ஃபோலியோவில் பங்கு சதவிகிதம் அதிகமாக்கப்படும். மேலும், சந்தை ஏறுமுகமாக இருக்கும் போது பங்கு சதவிகிதம் குறைக்கப்படும்.  எனவே, மறைமுகமாக சந்தையின் நிலைமையை அறிந்து கொள்ள, இந்த ஃபண்ட்களில் பங்கின் சதவிகிதம் எவ்வளவு இருக்கிறது என்று பார்க்கலாம். இதன் விவரம் அட்டவணையில் உள்ளது. அட்டவணை இரண்டு பகுதியாக இருக்கிறது. முதல் பகுதியில், டைனமிக் ஃபண்ட் திட்டங்களில், பங்கின் அளவு குறைந்து வருகிறது. ஆக மொத்த்தில் சராசரியாக 60 சதவிகிதத்திற்கு குறைவாகவே இந்த ஃபண்ட்களில் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.




இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டியது நிறைய ஃபண்ட் மேலாளர்கள், சந்தை ஏறியதாக கொண்டு, பங்கு  முதலீட்டு சதவிகிதத்தை குறைத்துள்ளார்கள். இப்போது தெள்ளத்தெளிவாக தெரிவது, சந்தை நன்கு ஏறிவிட்டது. ரிஸ்க்கை (Risk ) குறைக்க வேண்டும் என்று பங்கு  முதலீட்டு சதவிகிதத்தை குறைத்து கொண்டு வருகிறார்கள்.  
 
எனவே ரிஸ்க் அதிகம் விரும்பாதவர்கள் சந்தை மிக அதிகமாக எறியுள்ள இந்தக் காலகட்டத்தில், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் அதிக லாபம் இருக்கும்பட்சத்தில், ஒரு பகுதியை கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கோ அல்லது    பேலன்ஸ்ட் ஃபண்ட்களுக்கோ, மற்ற கலப்பின திட்டங்களுக்கோ மாறுவது நல்ல பலன் தரும் என்று எதிர்பார்க்கலாம். மேற்கண்ட குறிப்பு  முன்னரே முதலீடு செய்து லாபம் பார்த்தவர்களுக்காக. 

இனி வருவது "காண மயிலாட கண்ட வான்கோழி" என்பது போல அடுத்தவர்கள் லாபம் அடைவதை பார்த்து தற்போது சந்தையில் நுழைய, பங்கேற்க நினைப்பவர்களுக்கு ஒரு மாற்று கருத்து.
 
இந்தக் காலகட்டத்தில் எடுத்தவுடன் முற்றிலும் பங்குச் சார்ந்த முதலீட்டில் முதலீடு செய்யாமல்,  முன்னர் கூறியபடி டைனமிக் அஸெட் ஃபண்டுகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.
 
மேலும் தொகையை ஒரே தடவையில் (ஒரே தவணையில்) முதலீடு செய்யாமல் முதலீட்டை எஸ்.ஐ.பி  (SIP ) முறையில் முதலீடு செய்வது சாலச் சிறந்ததாகும். 

No comments:

Post a Comment